மன்னாரில் 105 நாட்களாக நீடித்த காற்றாலை, கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் நிறுத்தம்!

250912mannar

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான மக்கள் போராட்டம், 105ஆவது நாளான நேற்று (நவம்பர் 15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.

போராட்டம் நிறைவு பெறுவது குறித்து மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் நேற்றைய தினம் மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ். ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்துகொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் பங்கேற்றனர்.

இதன்போது அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில், “மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்கின்றோம். எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு,” என்று அவர் தெரிவித்தார்.

அவர்களின் முக்கிய கோரிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனேயே இந்தப் போராட்டத்தை நிறுத்துவதாகவும், வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புவதாகவும் மாக்கஸ் அடிகளார் கூறினார்.

எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக அரச அதிபர் தலைமையில் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைத்துச் செயல்படுவது சிறந்ததாக அமையும் என்றும் அவர் போராட்டக் குழு சார்பாகத் தெரிவித்துக் கொண்டார்.

இதையடுத்து, அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.

Exit mobile version