அக்குரேகொட இரட்டைக் கொலை: 4 வாகனங்கள் பறிமுதல், மொனராகலையில் சிக்கிய துப்பாக்கிதாரி – சதித்திட்டம் அம்பலம்!

06 1

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மிக முக்கியமான திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தக் கொடூரக் குற்றம் ஒரு பாதாள உலகக் குழுவினால் மிகவும் நுணுக்கமாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் அரங்கேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விசாரணையின் ஆரம்பத்தில், குற்றவாளிகள் ஒரு காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மட்டுமே தகவல் இருந்த நிலையில், பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை மூலம் தற்போது இந்தக் குற்றம் கணிசமான அளவிற்குத் தீர்க்கப்பட்டுள்ளது. இக்கொலைக்காக மொத்தம் நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார், அந்த நான்கு வாகனங்களையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். இதில் ஒரு வாகனம் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் ஓட்டுநரைத் தவிர, ஏனைய அனைத்து முக்கிய சந்தேகநபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இக்கொலையைச் செய்த பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் நேற்று (25) மொனராகலையில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனுடன், கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மொனராகலையில் கைது செய்யப்பட்டவருடன் மேலும் இருவர் பிடிபட்டுள்ளதோடு, அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், கொலையின் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட டிஐஜி சஜீவ மெதவத்த உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவாளியைக் கண்டறிய ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version