முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக வெளியான செய்திகளை அவரது மகனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தற்போது தங்காலை ‘கார்ல்டன்’ இல்லத்திலும், கொழும்பு நுகேகொடை இல்லத்திலும் மாறி மாறித் தங்கி வருகிறார்.
நுகேகொடையிலுள்ள இல்லம் வாடகைக்கு எடுக்கப்பட்டது அல்ல. ராஜபக்ச குடும்பத்தைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர் ஒருவர், தற்போதைய அரசாங்கத்திற்குப் பயப்படாமல் தனது வீட்டை அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கியுள்ளார் என நாமல் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வார் என்றும், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வழங்குவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை மஹிந்த ராஜபக்ச மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானித்து வருவதாகவும், அவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எவ்வித தடைகளும் இல்லை என்றும் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் மேலும் தெரிவித்தார்.