மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடி: சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

Untitled 87

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான முழுமையான விபரங்களைச் சத்தியக்கடதாசி (Affidavit) மூலம் சமர்ப்பிக்குமாறு கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் இந்தச் சொத்து விபரப் பிரகடனத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த நிலையில், தற்போது புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சொத்து விபரக் கோரிக்கையானது, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல் புகார்களை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, சமீபத்தில் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் விசாரணையில், முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா வரை கையூட்டல் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சொத்து விபரக் கோரிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவைத் தவிர, இன்னும் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 03) இவ்வாறான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் தங்களது சொத்துக்களைப் பிரகடனப்படுத்த 12 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு மேல் மேலதிக காலம் எக்காரணம் கொண்டும் வழங்கப்படமாட்டாது என்றும், அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறுபவர்களுக்கு எதிராகப் புதிய சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், கடந்த கால ஊழல் விசாரணைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது. 2010-2015 காலப்பகுதியில் ராஜபக்ச குடும்பத்தினர் வௌிநாடுகளில் இரகசியமாகச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக நீண்டகாலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்த விசாரணை ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சொத்து விபரப் பிரகடனம் ஊழல் தடுப்புப் போரில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version