இலங்கையின் வடக்குக் கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக (Depression) விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இது வடமேற்குத் திசையில் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் (mm) அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.