யாழில் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன்: வெளியாகிய காரணம்

23 1

யாழில்(Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(22) மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த 19 வயதுடைய வைரவநாதன் டிலக்க்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் குறித்த ஹோட்டலில் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற மின் தூக்கியானது திறந்த வெளியான மின் தூக்கியாக காணப்படுகிறது.

அதனை இயக்கும் ஆழியும் (switch) கீழேயே காணப்படுகிறது.

குறித்த மின்தூக்கியை கீழிருந்து ஒருவர் இயக்கும்போது அது மேலே செல்லும். மின்தூக்கியினுள் இருப்பவரால் அதனை இயக்க முடியாது.

அந்தவகையில் குறித்த இளைஞன் அந்த மின் தூக்கியில் ஏறிய பின்னர் அவர் தயார் நிலையில் இருப்பதற்கு முன்னர் அந்த மின் தூக்கியை இயக்கினார் இதன்போது குறித்த இளைஞனின் தலை இரும்பு கேடர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version