இறையாண்மை பத்திர பதிவுதாரர்களின் தற்காலிக குழுவின் பிரதிநிதிகளுடன் இலங்கை விரைவில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடத்தப்படவுள்ள இந்த பேச்சுவார்த்தைக்கான சரியான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“12 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை கடந்த மாதம் நிராகரித்தது.
இது, முக்கியமான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மற்றும் இரண்டு வருட கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அதன் முயற்சிகளை தாமதப்படுத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம், பங்கு பத்திரகாரர்களின் முன்மொழிவுகளுக்கு இணங்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
முன்னதாக பங்குபத்திரகாரர்களின் முன்மொழிவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இல்லையென்று இலங்கையின் முக்கிய பொருளாதார நிபுணர் ஒருவரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது” என கூறியுள்ளார்.