வெள்ள அனர்த்தத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்கள் அல்லது விலங்குகளின் உடலங்களை மக்கள் உண்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) இலங்கை கிளை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெள்ளம், நோய் அல்லது காயங்கள் காரணமாக இறக்கும் விலங்குகளின் உடலங்களைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் இறந்த மீன்கள் உட்பட எந்தவொரு விலங்கின் உடலத்தையும் பொதுமக்கள் தொடுவது, சேகரிப்பது அல்லது உண்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்த விலங்குகளைக் கையாள்வதற்கு முன்னர், பொதுமக்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுபவர்கள், தொற்று அபாயத்தைக் குறைக்கப் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
கையுறை மற்றும் முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். சவர்க்காரம் மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு கைகளைத் தவறாமல் சுத்தமாகக் கழுவுதல் உள்ளிட்ட கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் WHO அறிவுறுத்தியுள்ளது.