சமூக ஊடகங்களின் வாயிலாக, முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம் வகைகளை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சருமத்தை வெண்மைப்படுத்தும் கிரீம் உள்ளிட்ட மேலும் பல கிரீம்கள் அவற்றின் காலாவதி திகதி மாற்றியமைக்கப்பட்டு சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காலாவதியான கிரீம் வகைகளை விற்பனை செய்து வந்த கொழும்பு – ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள இரண்டு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இராஜகிரிய ஒபேசேகரபுர மற்றும் அம்பகஹ சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள இரு கடைகளே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கிரீம் வகைகளின் காலாவதி திகதியை மாற்றி அதனை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு கடைகளிலும் இருந்த அனைத்து கிரீம் வகைகளையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.