அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்றவில்லை – தேசிய மக்கள் சக்தி
அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இல்லை என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை.
எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டம் ஊடாகப் பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்வி கண்டதொரு பொறிமுறையாகும்.
நானும் மாகாண சபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்குப் பதிலாக அதன்மூலம் நிர்வாகப் பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.
13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர்.
எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும்.
புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சுமூகமாக வாழ முடியும்” எனக் கூறியுள்ளார்.
Comments are closed.