கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசு கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஆதவன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (12) நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த பகுதியானது வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருந்தாலும் சங்கானை, அராலி போன்ற பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. அந்த சூழலை அண்டியுள்ள மக்களின் சுவாசத்துக்கு அது பிரச்சினையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவருமான சிறீ பவானந்தராஜா பதிலளிக்கையில், மாநகர சபையினர் தான் இந்த வேலைகளை செய்கின்றனர். கழிவகற்றல் என்பது ஒரு பாரிய பிரச்சினையாகத் தான் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.