25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் இந்த எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
லஞ்ச, ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.
சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய சட்டத்தின் பிரகாரம், ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்குள் தங்களிடம் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை ஜூன் 30ஆம் திகதிக்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானது.
இந்நிலையில், ஜூன் 30ஆம் திகதிக்குள் விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில் விபரங்களை சமர்ப்பிக்கும்போது, அவர்களிடமிருந்து ஒரு தொகை அபராதம் வசூலிக்கப்படும் என பாராளுமன்ற தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.