கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் மகேஷக விஜேவர்தன இது குறித்துத் தெரிவிக்கையில், குழந்தைகளே இந்தக் காய்ச்சல் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மழைக்காலத்திலும் ஆண்டின் இறுதியிலும் இந்தத் தொற்றுநோய் நிலைமை மிகவும் அதிகமாகக் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் பாடசாலைகளில் உள்ள குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
வைத்தியர் விஜேவர்தன மேலும் கூறுகையில், இந்த நோய் பல வடிவங்களில் ஏற்படலாம் .திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். சில குழந்தைகள் சளி, காது தொற்று, சைனசிடிஸ் அல்லது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.
இவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். இது சில சமயங்களில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும். மேலும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் கடுமையான சுவாசச் சிக்கல்களுக்கு உள்ளாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் ஏற்படும் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.