தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) ஆரம்பித்துள்ள நிலையில், தாயகப் பரப்பிலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன், மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலியைச் செலுத்தினார்.
மாவீரர் துயிலுமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்குச் சுடரேற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு அவர் உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார்.
2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தற்போது கொழும்பில் தங்கியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், கொழும்பிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.