தமிழர்களுக்காக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்த அமெரிக்க செனட்டர்

24 66497d04e0623

தமிழர்களுக்காக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்த அமெரிக்க செனட்டர்

கைது அச்சமின்றி, தமிழர்கள் இனப்படுகொலையின் 15 ஆண்டுகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்று மேரிலாந்திற்கான அமெரிக்க செனட்டர் பென் கார்டின் (Ben Cardin) இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கும் செனட்டர் பென் கார்டின், தமது ‘X’ தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். வலுக்கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மரணித்தவர்களின் நினைவேந்தலுக்கான முள்ளிவாய்க்கால் தினத்தை ஒட்டிய கைதுகளால் தொந்தரவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை மையப்படுத்தியே அமெரிக்க செனட்டரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.

முன்னதாக வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப் போவதாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் அதிகாரிகள் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஆக்ரோஷமாக தள்ளி, மாணவர்கள் பரிமாறவிருந்த கஞ்சி பானையையும் எடுத்துச் சென்றனர்.

அதேநேரம், திருகோணமலை சம்பூரில், இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கஞ்சி பரிமாறிய நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version