இலங்கையுடன் ஈடுபாட்டைப் பேண விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா
வெள்ளை மாளிகையின் (White House) தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஒத்துழைப்புடன் தொடர்வதற்காக இலங்கையுடன் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேணுவதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, இந்த வார தொடக்கத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான (Sagala Ratnayaka) தொலைபேசி உரையாடலின் போது ஜேக் சல்லிவன்(Jake Sullivan) இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அமெரிக்க ஆதரவு உட்பட இருதரப்பு ஈடுபாடுகள் குறித்து அவர்கள் உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி, மற்றும் ஆளுகை கூறுகளை நிறைவு செய்வதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் சல்லிவனும் ரத்நாயக்கவும் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.