இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), வரும் ஜனவரி 16-ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான ஜூலி சங், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இலங்கையில் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், இலங்கை உட்பட பல நாடுகளில் பணியாற்றும் சுமார் 30 மூத்த இராஜதந்திர அதிகாரிகளைத் திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது. இந்த உலகளாவிய இராஜதந்திர மாற்றத்தின் ஒரு அங்கமாகவே ஜூலி சங் தனது பதவியை நிறைவு செய்கிறார்.
புதிய தூதுவர் ஒருவர் வெள்ளை மாளிகையினால் பரிந்துரைக்கப்பட்டு, செனட் சபையினால் அங்கீகரிக்கப்படும் வரை தூதரகத்தின் தற்போதைய பிரதித் தூதுவரான ஜேன் ஹோவெல் (Jane Howell), தற்காலிகத் தூதுவராகப் (Chargé d’Affaires) பொறுப்பேற்றுப் பணியாற்றுவார்.
ஜூலி சங் அமைத்துக்கொடுத்த வலுவான அடித்தளத்தின் மீது, இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் அமெரிக்கா தனது கூட்டாண்மையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் எனத் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

