லண்டனில் பணியாற்றும் இந்தியத் தமிழர் ஒருவரை இன ரீதியாகப் பாகுபாடு காட்டிய குற்றச்சாட்டில், அங்கு முகாமையாளராகப் பணியாற்றும் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பாரிய அபராதம் மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள முன்னணி உணவு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு முகாமையாளராக இருந்த இலங்கைத் தமிழர், தன்னை இன ரீதியாக இழிவுபடுத்தியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முகாமையாளர் மீதான பின்வரும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தினார்.
இந்திய இளைஞரை “அடிமை” (Slave) என்று அழைத்ததோடு, “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார்.
இந்தியர் என்பதால் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முகாமையாளர் தனது நாட்டைச் (இலங்கை) சேர்ந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
அளவுக்கு அதிகமான நேரம் வேலை செய்ய வற்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர் விலகல் கடிதம் கொடுத்தபோது, தொலைபேசி வாயிலாக மிரட்டித் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை (Notice Period) வழங்காமல் உடனடியாகப் பணிநீக்கம் செய்தமை சட்டப்படி தவறு என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்றம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மொத்தம் 66,800 பவுண்ட்ஸ் (சுமார் 2.5 கோடி இலங்கை ரூபாய்) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
இதில் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் நிலுவைத் தொகைகளும் அடங்கும்.
மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் குறித்த நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் பணியிடப் பாகுபாட்டைத் தவிர்ப்பது குறித்த சிறப்புப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.