ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சிவில் உடையில் நடமாட்டம்: பழைய பொலிஸ் தலைமையகம் அருகே 2 கமாண்டோக்கள் கைது!

04 7

கொழும்பிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக, கருப்புத் துணியால் சுற்றப்பட்ட ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கியுடன் சிவில் உடையில் நடமாடிய இரண்டு இராணுவ வீரர்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 1-வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் (Lance Corporal) தர அதிகாரிகளாவர்.

சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (Cyber Crimes Division) இணையக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் தேசிய அடையாள அட்டையோ அல்லது இராணுவ அடையாள அட்டையோ (Army ID) இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, இவ்விரு வீரர்களும் சில விசேட பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பும் போது ஸ்னைப்பர் துப்பாக்கியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.

தாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே, பழைய பொலிஸ் தலைமையகப் பகுதிக்குச் சிவில் உடையில் வந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில், முறையான அடையாள அட்டைகள் இன்றி, சிவில் உடையில் நவீன ரகத் துப்பாக்கியுடன் இராணுவத்தினர் நடமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தற்செயலான நிகழ்வா அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருந்ததா என்பது குறித்து சி.ஐ.டி-யினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version