அநுர அரசாங்கத்தின் முதலாவது தனியார் மயப்படுத்தல் திட்டம் ஆரம்பம்

24 17

நட்டத்தை எதிர்நோக்கும் கேன்வில் ஹோட்டல் திட்டத்தை விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு நிபந்தனைக்கு ஏற்ப, அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மேற்கொள்ளும் முதலாவது தனியார் மயமாக்கல் நடவடிக்கையாக, இது அமையவுள்ளது.

இந்தநிலையில், ஹோட்டலை இயக்குவதற்காக, 2011இல் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமான கென்வில்லின் பங்குகளை விற்பனை செய்வதற்காக, முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த செயல்முறையை தொடர்வதற்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.

விற்பனையை நிர்வகிக்க முன்னணி தொழில்முறை சேவை நிறுவனமான டெலாய்ட்டை தக்க வைத்துக் கொள்ளவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜெயதிஸ்ஸ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

61 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலதனத்துடன், கொழும்பில் உள்ள 47 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 458 அறைகள் கொண்ட, இந்த ஹோட்டலை இறுதிச்செய்ய, இன்னும் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த மூலதனத்தை திரட்டும் வாய்ப்பு இல்லாததால், ஜனாதிபதி அநுரகுமாரவின் புதிய நிர்வாகம் சொத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதேவேளை கேன்வில் நிறுவனம், தென்பகுதியின்; கடற்கரையிலும் ஹோட்டல் ஒன்றை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version