சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்தன; ஆவணங்கள் கிடைத்துள்ளன – இன்டபோல் விசாரணைக்கும் தயார்: அர்ச்சுனா இராமநாதன் சவால்!

images 9 1

எவ்விதப் பரிசோதனையுமின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் தான் பொறுப்புடன் கூறுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ 14) நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் பேசும்போது, ‘அர்ச்சுனாவின் கொள்கலன்கள்’ என்று தனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் இது தொடர்பாகச் சில விடயங்களைக் கூற வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் இந்தக் கொள்கலன்கள் பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சராக இருந்தபோது விடுவிக்கப்பட்ட கொள்கலன்களே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தான் கூறிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், “நான் ஒரு மாத காலமாக ஐரோப்பியப் பயணம் சென்றிருந்தேன். அப்போது 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக எனக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இப்போதும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.” என்றார்.

“விடுவிக்கப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களுக்குள் ஆயுதங்களே இருந்தன. வேண்டுமென்றால் என்னை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மட்டுமல்ல, இன்டபோலுக்கு (Interpol) கொண்டுசென்றாவது கேளுங்கள். நான் பதிலளிக்கின்றேன். அது தொடர்பில் குழுவொன்றை அமையுங்கள். பயமின்றி கூறுகின்றேன், அதில் ஆயுதங்களே இருந்தன,” என்று அவர் சவால் விடுத்தார்.

Exit mobile version