யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் (உச்ச நீதிமன்றம்) முக்கியமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம், கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி இரவோடு இரவாக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தச் செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் கண்டனத்துக்கு உள்ளாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
“சைவத்துக்கும், தமிழுக்குமாகத் தொடங்கப்பட்ட பாடசாலை” என்ற வகையில், பாடசாலையின் பண்பாட்டைப் பேணும்பொருட்டு, இந்தச் செயற்பாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை அந்த நிலையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்காலத் தடையுத்தரவில் சிவலிங்கத்தை வேறு எந்த இடத்துக்கும் மாற்றப்படக் கூடாது, மற்றும் அது தொடர்பான வேலைகள் செய்யப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.