கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

Untitled

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுங்கள்” என்ற தொனிப்பொருளில் சில செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அண்மைக்காலமாகப் பரவி வருகின்றது.

இதனை வாசிப்போர், எல்லாக் கிராம உத்தியோகத்தர்களும் தவறு செய்கின்றனர் என்ற தவறான மனப்பதிவைப் பெறுகின்றனர். இதனால் நேர்மையான கிராம உத்தியோகத்தர்கள் பலர் பெரும் மனக் கவலை அடைந்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே பணி புரிகின்றனர் என்பதை இம்ரான் மகரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட உள்ளன. அனர்த்த காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒருசில நாட்களில் நேரில் சென்று அவதானிப்பது என்பது சிரமமான காரியம்.

கிராம உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக, சிலர் தமது பிரிவுக்கு மேலதிகமாக இன்னுமொரு பிரிவையும் கவனிக்க வேண்டியுள்ளது. சிலரது குடும்பங்களும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் 6 நாட்கள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் ஏனைய சில சேவையாளர்களை ஒப்பிடுகையில் குறைந்த சம்பளமே பெறுகின்றனர்.

அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளும் முரண்படும் போது கிராம உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையையும் அவர் வெளிப்படுத்தினார்:

“அரசியல்வாதிகள் மக்களைக் கவரும் வகையில் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். ஆனால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சில மட்டுப்பாடுகள் உள்ளன. சுற்றறிக்கையை மீறி அரசியல்வாதிகளின் செய்திகளுக்கேற்ப செயற்பட்டால் கணக்காய்வு திணைக்களத்தின் நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தமது தொழிலையும் பாதுகாக்கும் வகையிலேயே கிராம உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டியுள்ளது.”

எனவே, அறிக்கைகள் வெளியிடுவோர் தவறு செய்வோருக்கெதிராக முறைப்பாடு செய்யுங்கள் என்ற வகையிலேயெ வெளியிட வேண்டும். ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படும் வகையில் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version