இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 708,348 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பதிவான சாதனை அளவிலான வருகை, இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது.
இந்த மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மாத்திரம் 151,693 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வழமை போல இந்தியாவே இலங்கையின் முதன்மையான சுற்றுலாச் சந்தையாகத் திகழ்கிறது; மார்ச் மாத வருகையில் 26 சதவீதமானோர் (39,424 பேர்) இந்தியர்களாவர். இவர்களைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவிலான பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 229,298 பயணிகள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை எட்டுவதில் சவால்கள் நிலவுகின்றன.
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் சுற்றுலாத்துறையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக இலங்கைக்கு வரும் இணைப்பு விமானங்கள் (Transit Flights) இரத்துச் செய்யப்பட்டமையால், மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மாத வருகை சுமார் 22 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறாயினும், இந்தச் சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் சுற்றுலாத்துறையைப் பாதுகாப்பதற்கான விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுற்றுலா வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விசேட ‘கியூ.ஆர்’ (QR) ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தவும், நேரடி விமானச் சேவைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இலக்கு எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆசிய சந்தைகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.