அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில் நடைபெற்றது.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும தலைமையிலான இலங்கை தூதுக்குழுவின் பங்கேற்புடன் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2025 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று வோசிங்டனில் முதல் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.