17 19
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் !

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் !

கடந்த நவம்பர் மாதம் வடக்கு கிழக்கு பகுதியில் மாவீரர்கள் நினைவு கூறுகின்ற நினைவேந்தல் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும் எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய தாய் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்கு அழைக்கப்படும் ஒரு நிகழ்வும் அந்நாட்களில் இடம் பெற்றிருந்தது. அநுரகுமார அரசாங்கமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பிரயோகிக்கும் ஒரு போக்கில் தான் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது.

இந்தநிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலே தற்போதைய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தென்படுகிறது. இந்த நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பல இளைஞர்கள் யுவதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிக்க நேரிட்டிருக்கின்றன விசாரணை இல்லாமல் விடுதலை இன்றி மிக நீண்ட காலங்களை சிறைக்கு பலியிட்டு விடுதலையாகிய போதும் இன்னமும் பலர் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழினத்தின் கனவுகளை மற்றும் இளைஞர் சக்தியை சிறைக்கூடங்களில் அழிக்கின்ற ஒரு வாய்ப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் என்றால் என்ன ? பயங்கரவாத விசாரணைப் பிரிவு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல் மற்றும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தைப் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது.

சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரைத் தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும் எனினும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.

கைதாகி சிறையில் உள்ள போது பாரிய – கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரம் இன்றியும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது.

சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மனித உரிமைகளுக்கு எதிரான மிக மோசமான சட்டம் என்றும் அடிப்படை குற்றவியல் நீதி அமைப்புகளுக்கு முரணான சட்டம் என்றும் சட்ட வல்லுனர்களால் கூறப்படுகிறது.

அண்மையில் இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் அந்தச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பது நல்லதல்ல என்றும் இதனை அகற்ற வேண்டும் என தமிழ் மக்களும் சிங்கள மக்களும் விரும்புகிறார்கள் என்ற கருத்தையும் இலங்கை அரசிடம் தமிழரசு கட்சி வலியுறுத்தி உள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தான் புரிந்து கொள்வதாகவும் எனினும் அச்சட்டத்தை நீக்கினால் தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாதிகள் அதனை பயன்படுத்தி அரசியல் செய்ய முற்படுவார்கள் என்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தாம் நீக்க போவதில்லை என்கிற நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுகுமார வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து அல்ல. கடந்த காலம் முழுவதும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் அது பாதகமானது அதனால் மக்களுக்கு பாதிப்பு என்பதை ஜேவிபி கூறி வந்தது. இன்றைய ஜனாதிபதி அநுரகுமாரவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டத்தின் அழைப்பினை தனது முகநூலில் வெளியிட்டிருந்தார். அதேபோல தேசிய மக்கள் சக்தி தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பிரச்சாரத்திலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் நீக்கவோம் என்கிற வாக்குறுதியையும் கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறது.

அதனை ஏற்றுக் கொண்டுதான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள் ஆணையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் இருக்கிறது. ஆனால் தற்போது அநுரகுமார திசாநாயக்க பயங்கரவாத சட்டத்தை நீக்கினால் தென்னிலங்கை பேரினவாதிகள் அதனை பயன்படுத்தி அரசியல் செய்வார்கள் எனக் கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளை காரணம் காட்டி பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைத்து தமிழ் மக்களை கொடுக்க வேண்டும் என்கிற பேரினவாதச் செயற்பாட்டின் வெளிப்பாடாகும்.

தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக தென்னிலங்கையில் கோஷமிடுகின்ற சிங்கள பேரினவாத தலைவர்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களால் தோற்கடிக்கபட்டவர்கள். தோற்கடிக்கப்பட்டவர்களை கண்டு அஞ்சி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினுடைய கோரிக்கையை மக்களினுடைய ஆணையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நிறைவேற்றாமல் இருப்பது மிகப்பெரிய அநீதியும் ஊழலும் ஏமாற்றமுமாகும்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமாக இருக்கட்டும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கமாக இருக்கட்டும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கமாக இருக்கட்டும் அனைத்து அரசுகளும் இன்று அநுரகுமார திசாநாயக்க கூறுகின்ற அதே காரணத்தை கூறிக்கூறியே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் இருந்தார்கள் பிறகு என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது ? மக்கள் ஆணையை மீறுகிறதா இந்த அரசும்?

கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகின்ற போது பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமான ஒரு சட்டம் என்றும் அதனை நீக்க வேண்டும், நீக்குவோம் என்கிற வாக்குறுதியை வழங்கி கால அவகாசம் என்ற சலுகையை பெற்றிருந்தமையும் இங்கு நினைவு கொள்ள வேண்டியது.

கடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் என்ற வகையில் இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டு பல நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்து கொள்ள முற்படுவது தான் இந்த அரசு, உண்மையிலேயே மாற்றம் என்கிற ஒரு விடயத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படையாகவும் வெளிப்பாடாகவும் இருக்கும்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...