2025ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று (டிசம்பர் 13) இரவு வானில் தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids Meteor Shower) என்று அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இந்த விடயத்தை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் (டிசம்பர் 13, நள்ளிரவு அல்லது டிசம்பர் 14 அதிகாலை) கிழக்கு திசையிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் வானில் பிரகாசமாகத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல், வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல், 3200 பேதான் (3200 Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது என்ற தனித்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் கண்கவர் நிகழ்வைக் காணச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை; வெறும் கண்களாலேயே இதைப் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

