சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மற்றும் நிதி மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடி முயற்சிகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்த நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி, இணையக் குற்றவாளிகள் மக்களின் நம்பிக்கை மற்றும் அவசர நிலையைத் தவறாகப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக SLCERT குறிப்பிட்டுள்ளது.
மோசடியாளர்கள் பின்வரும் வழிகளில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்று போலியாகத் தோற்றமளித்து மோசடி செய்கின்றனர்.
போலியான ஊக்குவிப்புச் சலுகைகள், பணப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்குவதாகச் சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுகின்றனர்.
புயல் மற்றும் கன மழையைத் தொடர்ந்து, நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை மோசடியான முறையில் பயன்படுத்தி, போலியான இணைய இணைப்புகளை (Links) வெளியிட்டுப் பணம் நன்கொடையாக வழங்க பொதுமக்களைத் தூண்டுகின்றனர்.
சிலரின் வங்கிக் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைந்து மோசடியாளர்கள் அவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, உடனடியாகப் பணத்தை இழக்கும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளுக்குள் நுழைய வேண்டாம். தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் போது பாதுகாப்பாக இருங்கள். தெரியாத நபர்கள் அல்லது உறுதிப்படுத்தப்படாத இணையத்தளங்களுக்குள் நுழையும் போது அதிக கவனத்துடன் இருங்கள்.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP – One Time Password) ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம்.
அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள், முன் கோரிக்கை எதுவுமின்றிச் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் பொதுமக்களின் முக்கிய தகவல்களைக் கோருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, இந்தக் காலப்பகுதியில் நிதி சேகரிப்புக் கோரிக்கை அல்லது பணச் சலுகை குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு சமூக ஊடகச் செய்தியிலும் அதிக கவனம் செலுத்தி, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு SLCERT பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

