நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஏனையவர்களுக்கு உதவுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அவசர அனர்த்த பதிலளிப்புப் பிரிவொன்று (Emergency Disaster Response Unit) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த அலகு நிறுவப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, புலம்பெயர் தொழிலாளர் சமூகத்திற்கு உடனடி நிவாரணத்தை வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு (SLBFE) பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, அவசர உதவியை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சவால்கள் காரணமாக, பணியகத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு தொழிலாளர்களினது குடும்பத்துக்கும் தலா 15,000 ரூபா வரை நிதியுதவி வழங்க வேலைவாய்ப்பு பணியகம் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தச் செயல்முறையை இலகுபடுத்துவதற்காகச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவுவதற்காக, பணியகம் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் விநியோகப் பொருட்களை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேவையுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் அனர்த்த நிலைமையிலும் கல்வி தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் 10,000 ரூபா வரையான பொருள் உதவி வழங்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அத்தியாவசிய மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு 7,000 ரூபா வரை நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்ப விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன், 1989 என்ற துரித எண் மூலமாகவோ அல்லது +94 719802822 என்ற வட்ஸ்அப் எண் மூலமாகவோ பகிர்ந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.