இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

1755232595226130 0

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள இந்த உப்புத் தொகையானது, தேசிய தரநிலைகளுக்கு இணங்க இல்லாததோடு, அரசாங்கம் நிர்ணயித்த இறக்குமதி காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய உப்புத் தொகையில் இதுவும் ஒன்றாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தரநிலைகள் நிறுவனம் (SLSI) வழங்க வேண்டிய தரச் சான்றிதழ் இல்லாததாலும், அரசு விதித்த இறக்குமதி காலவரம்பை மீறியதாலும், இந்த உப்புத் தொகையை விடுவிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த முழு உப்புக்கும் தரச் சான்றிதழ் வழங்க நிறுவனம் மறுத்துள்ளதுடன், அந்த உப்பு தேவையான தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 15ஆம் திகதி அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில், சீரற்ற வானிலை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக, ஜூன் 10ஆம் திகதி வரை அரசாங்கம் உப்பு இறக்குமதி தடையை தற்காலிகமாக நீக்கியது. அப்போது 1,50,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை மொத்தமாக 1,43,655 மெட்ரிக் தொன் உப்பை (வரிகளுடன்) ரூ. 5.7 பில்லியன் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. இவற்றில் இதுவரை 1,20,705 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே சுங்கத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version