எல்பிட்டி தனியார் பாடசாலை மாணவர்கள் 16 பேருக்கு திடீர் ஒவ்வாமை: வைத்தியசாலையில் அனுமதி – பொலிஸ் விசாரணை!

25

காலி மாவட்டம், எல்பிட்டி பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் திடீர் ஒவ்வாமை (Allergy) காரணமாக இன்று, வியாழக்கிழமை (26) எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களுக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் ஒரே மண்டபத்தில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு ஒரே நேரத்தில் ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர். வகுப்பறையில் இருந்தபோது திடீரென மாணவர்களின் உடலில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத் தடிப்புகள் ஏற்பட்டதையடுத்து, பாடசாலை நிர்வாகம் உடனடியாக அவர்களை எல்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றது.

இந்த ஒவ்வாமைக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், வகுப்பறை மண்டபத்தில் இருந்த ஏதேனும் விஷப் பூச்சிகள் கடித்தமையினால் அல்லது மாணவர்கள் அறியாமல் ஏதேனும் விஷத்தன்மை கொண்ட திரவம் அவர்களின் உடலில் பட்டமையினால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல எனவும், அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும் எல்பிட்டி பொலிஸார் மற்றும் வைத்தியசாலைத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version