மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களின் விழாக்களின் போது வாகன தரிப்பிடம் மற்றும் ஆலயங்களில் அமைக்கப்படும் கடைகளின் மூலம் வரும் வருமானங்களில் குறிப்பிட்ட ஒரு வீத வருமானத்தினை பிரதேச சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று(25.06.2025) பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் எனது தலைமையில் இடம்பெற்ற அமர்வில் பிரதேச சபை செயலாளர் சுபராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வின் போது, பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களின் விழாக்களின் போது மட்டும் வாகன தரிப்பிடம் மற்றும் ஆலயங்களில் அமைக்கப்படும் கடைகளின் மூலம் வரும் வருமானங்களில் குறிப்பிட்ட ஒரு வீத வருமானத்தினை பிரதேச சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் பல வாத பிரதிவாதங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது, நடந்த வாக்கெடுப்பில், வருகை தந்த 18 நபர்களில் 10 நபர்கள் ஆதரவாகவும் ஏழு நபர்கள் எதிராகவும் ஒரு நபர் நடுநிலையும் வகித்தனர்.
இதன் அடிப்படையில் குறித்த பிரேரணை பத்து வாக்குகள் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆலய விழாக்களின் போது வாகன தரிப்பிடம் மற்றும் கடைகளினால் கிடைக்கப்பெறும் வருமானங்களில் குறிப்பிட்ட வீத வருமானத்தை பிரதேச சபை அறவிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரதேச சபையில் காணப்படும் பிரேதம் ஏற்றும் வாகனத்தினை திருத்தி அமைத்து குறைந்த கட்டணத்தில் அந்த சேவையினை வழங்குவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதேச சபையில் காணப்படும் ஏனைய இயங்கா நிலையில் உள்ள வாகனங்களை திருத்தி அமைத்து பிரதேச சபைக்கு தேவையான கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்கு பயன்படுத்துவதற்காக தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக பிரதான வீதிகளில் மின்விளக்குகளை புதிதாகப் போடவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மயானங்களிலும் அதனைத் தொடர்ந்து அதிகளவில் மின் விளக்குகள் தேவைப்பாடு உள்ள பகுதிகளிலும் மின்விளக்குகளை பொருத்துவது தொடர்பாகவும் இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.