18 15
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய புள்ளிக்கு எதிராக பயப்போகும் பிரித்தானிய தடை

Share

கடுமையான போர் கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்னவிற்கு (Kamal Gunaratne) பிரித்தானிய தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரையானது, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் (ITJP)பிரித்தானிய வெளியுறவு, கமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்கு (FCDO) சமர்பிக்கப்பட்டுள்ளது.

ITJP என்பது 2013 முதல் இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் செயல்பட்டு வரும் ஒரு சுயாதீனமான, சர்வதேச, இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

ITJP அமைப்பின் குழுவில் சர்வதேச வழக்கறிஞர்கள், நிபுணர் புலனாய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை கூட்டாக ஆவணப்படுத்தும் அதிர்ச்சி நிபுணர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ITJPஅமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கமல் குணரத்னவின் குற்றங்களை குறித்த அமைப்பு மூன்று கட்டங்களாக வேறுபடுத்தி பிரித்தானியாவுக்கு பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளது…

6 வது கஜபா படைப்பிரிவின் தளபதியாக இருந்தபோது, ​​1995 ஆம் ஆண்டு ஆபரேஷன் ரிவிரேசாவின் போது தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை (பாலியல் வன்முறை உட்பட), கட்டாயமாக காணாமல் போதல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான மரணதண்டனைகள் வழங்கியமை.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், 53வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தபோது, ​​பொதுமக்கள் மற்றும் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை சட்டவிரோதமாகக் கொன்றமை.
நவம்பர் 2009 முதல் 2010 வரை, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியாகவும், வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாகவும் இருந்தபோது, ​​தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை (பாலியல் வன்முறை உட்பட), கட்டாயமாக காணாமல் போதல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான மரணதண்டனைகள் வழங்கியமை.

இவ்வாறாதொரு பின்னணியில், கமல் குணரத்ன மீதான தடைகளுக்கு அனுமதி அளிப்பது, மனித உரிமைகளின் கடுமையான மீறல்களைத் தடுத்து பொறுப்புக்கூற வைப்பதற்கான பிரித்தானியாவின் மனித உரிமைகள் தடைகள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் என ITJP அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசியப் பாதுகாப்பின் பெயரில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை பிரித்தானியா பொறுத்துக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை அது இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பும் என்றும் அமைப்பு கூறியுள்ளது.

மேலும், சிவில் போரின் போது இலங்கையின் பரவலான நடைமுறைகளான தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு இறுதிப் பொறுப்பைக் கொண்ட நபர்களை இந்த தடை பொறுப்பேற்க வைக்கும் என்றும் ITJP வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...