ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைமையை தீர்மானிப்பது பேராளர் மாநாட்டிலே ஆகும். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த கோரிக்கையும் தற்போது வரை எழவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் வெளியில் இருந்து கொண்டு எமது கட்சியைப்பற்றி பேஸ்புக் மூலமாக தவறான விடயங்களை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனினும், கட்சியினுடைய தலைமைத்துவ மாற்றம் என்பது அவ்வப்போது நடக்க வேண்டுமாக இருந்தால் அதைச் செய்வதற்கு நான் தயங்கப்போவதில்லை.
என்னைப் பொறுத்தமட்டில் கட்சிக்கு நான் தலைவராக இருக்க வேண்டும் என்ற விருப்பம், கட்சி அங்கத்தவர்களிடையே இருக்கும் மட்டுமே நான் இதற்கு தலைமை தாங்குவேன்.
குறிப்பாக எனது காலப்பகுதியில் தலைமைத்துவத்திற்கு தகுதி உள்ளவர்கள் கட்சிக்கு உள்ளேயும் அதேபோல் கட்சிக்கு வெளியேயும் இருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு பயிற்சி அளித்தால் நாளைய தலைவர்களாக உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.