மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்கும்போது, நிலக்கரிச் சூழலால் (Coal conditions) ஏற்படும் மேலதிக செலவுகளை நுகர்வோர் கட்டணத்தில் சேர்க்காமல் இருப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே இனிவரும் கட்டணத் திருத்தங்களில் கருத்திற்கொள்ளப்படும் என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது, நிலக்கரி இறக்குமதி அல்லது கையிருப்பில் ஏற்படும் மேலதிக செலவுகள் மற்றும் ஏனைய நியாயமற்ற செலவினங்கள் எதற்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை PUCSL உறுதிப்படுத்தியுள்ளது. மின்சார சபையின் வினைத்திறனற்ற மேலாண்மை அல்லது எதிர்பாராத நிலக்கரிச் சூழலால் ஏற்படும் நிதிப் பாதிப்புகளை நுகர்வோர் மீது சுமத்தக் கூடாது என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
இனிவரும் காலங்களில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் இத்தகைய தேவையற்ற செலவினங்களை முழுமையாக நீக்குவதற்கு ஆணைக்குழு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்தத் தீர்மானம் நுகர்வோருக்கு நியாயமான மின்சாரக் கட்டணத்தை உறுதிப்படுத்துவதுடன், மின்சார உற்பத்திச் செலவுகளை முறையாகக் கட்டுப்படுத்த இலங்கை மின்சார சபையைத் தூண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

