இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA), நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தைச் சீர்குலைப்பதுடன் பாரிய சர்வதேச மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். கொழும்பு என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தச் சட்டமூலத்தை “நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக ஆபத்தான சட்டங்களில் ஒன்று” என வர்ணித்தார்.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகை போன்ற சர்வதேச பொருளாதார நன்மைகளை இலங்கை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டினார். “GSP+ என்பது ஒரு பரிசு அல்ல; அது சில நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்படுவது. இத்தகைய கடுமையான சட்டங்கள் அந்தச் சலுகையைப் பாதிக்கும்” என அவர் கவலை வெளியிட்டார். அத்துடன், இந்தச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லை என்றும், இது சாதாரண குடிமக்களை 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகுக்கும் என்றும் அவர் சாடினார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒரு வருடம் வரை தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்த அவர், இது நீதித்துறை மேற்பார்வையைக் குறைக்கும் என்றார். மேலும், ஜனாதிபதி எந்தவொரு அமைப்பையும் சட்டவிரோதமானது என அறிவிக்கவும், எந்தவொரு இடத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாகப் பிரகடனப்படுத்தவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இத்தகைய இடங்களைப் புகைப்படம் எடுத்தால் 3 மில்லியன் ரூபா அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்காலிகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விடவும் இந்த புதிய வரைவு மிகவும் ஆபத்தானது என ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார். “இது ஜனநாயகத்தின் மீதான ஒரு பிரம்மாண்ட தாக்குதல்” என அவர் கூறினார். இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தற்போது நாட்டுக்குத் தேவை மக்களுடன் இணக்கமான சட்டமே தவிர இத்தகைய கடுமையான விதிகள் அல்ல எனத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும், இச்சட்டம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விட மக்களின் உரிமைகளை முடக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என விமர்சித்தார்.