தனியார் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், 14.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் மார்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தனியார் வாகனங்களின் மதிப்பு 4.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
அதேநேரம், வாகனங்களுக்கு மேலதிகமாக, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 102.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான காய்கறிகள் (பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் பிற காய்கறிகள்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த காலப்பகுதியில் 34.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.