எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க உடன்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த செயற்பாடுகளுக்கு தலைமையில் தாங்குகின்றார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான வேலைத்திட்டம் தொடர்பில் இந்த கலந்துரையாடல்களில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்டத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான கனக ஹேரத் உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.