ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்காகத் தனியான மற்றும் பாரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண உயர் அதிகாரிகளுடன் நடத்திய விசேட ஆலோசனைக் கூட்டத்தில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 32 பாரிய அபிவிருத்தித் திட்டங்களை (Mega Projects) உடனடியாக மீள் பரிசீலனை செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வெறும் கட்டடங்களை நிர்மாணிப்பதைக் காட்டிலும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இளைஞர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத இயற்கை வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல், மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் நீண்டகாலப் பொருளாதார நன்மைகளைத் தரும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டை வடக்கின் ‘அபிவிருத்தி ஆண்டாக’ மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், மாகாண சபையின் வழக்கமான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மத்திய அமைச்சுகளினூடாக இந்த விசேட நிதிகள் கிடைக்கப்பெறவுள்ளன. “மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைய வேண்டும்” என அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ள ஆளுநர், இந்த அரிய வாய்ப்பை மாகாணத்தின் வளர்ச்சிக்காகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.