கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இந்தச் செயற்பாடு நிறுத்தப்படாவிட்டால் அது ‘நல்லிணக்க அல்லது மகிழ்ச்சியாக வாழ்கின்ற ஒரு சூழலைக் குழப்பக் கூடியதாக இருக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புதிய பௌத்த வழிபாட்டுத்தலங்களை அமைப்பதன் மூலம் இனங்களுக்கிடையேயான அமைதி பாதிக்கப்படலாம் என்ற கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.