சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சியை நிறுவுவது என்பதே பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது பற்றிப் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில், கொழும்பு மாநகர சபை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மிகவும் பெரிய மாநகர சபையாக கொழும்பு மாநகர சபை கருதப்படுகின்றமையினால் அதனை கைப்பற்றுவதே அரசியல் கட்சிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளது.
கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இரு பெரிய கட்சிகளின் தலைவர்களும் தற்போது சுயேச்சை குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளுடன் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் இரு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுவரை தீர்க்கமான முடிவினை எட்ட முடியாத நிலையில், அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்திற்குப் பிறகு இந்த விடயம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்க்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.