பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டின் தற்போதைய அவசர அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாளையும் (18) நாளை மறுதினமும் (19) நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு டிசம்பர் 18ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படும்.
நாளை (18) பிற்பகல், அனர்த்தத்தின் பின்னரான நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அன்றைய தினம் 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.