வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர் நெற்செய்கையானது முற்றிலுமாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தின் வருடாந்த மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சி குறித்த நான்கு நாட்களில் பெறப்பட்டமையால் இந்த வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.
வெள்ளம் காரணமாக அனைத்துக் குளங்களும் வான் பாய்ந்திருந்ததுடன், 124 குளங்கள் உடைப்பெடுத்திருந்தமையாலும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி நெற்செய்கை சேதமடைந்தது.
வவுனியா மாவட்டத்தில் இந்த முறை பெரும்போக நெற்செய்கையானது 62,846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ள அனர்த்தம் காரணமாக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்வதற்கு நிலத்தைப் பண்படுத்துதல், விதைநெல், பசளை, கிருமிநாசிகள் உட்பட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (ரூ. 150,000) வரை செலவாகும் நிலையிலே, விவசாயிகள் வங்கிக் கடனைப் பெற்றும் தங்களது நகைகளை அடகு வைத்தும் இந்தச் செய்கையினை மேற்கொண்டிருந்தனர். இதனால் அவர்களது எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அரசினால் வயல் அழிவிற்காக ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பணத்தினை விரைந்து வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.