இலங்கையைப் பௌத்த இராச்சியமாகப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் தவறிவிட்டதாகப் பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “யுத்தத்தை வென்ற இராணுவ வீரர்களின் சுவாசக் காற்றைச் சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிகப் பாதுகாவலர் மட்டுமே என்பதை அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசியலமைப்புச் சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைதுகள் இடம்பெறுவதாகச் சாடினார். “சிங்கள பௌத்த விரோதிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். ஜே.வி.பி.யின் டில்வின் சில்வா ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்து இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்வோம் என்றார். ஆனால், நாம் எமது போராட்டத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுடன் ஏழு இரகசிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கஸ்ஸப தேரர், இலங்கையில் இந்தியாவின் துறைமுக நகரம் (Port City) ஒன்றையும் ஹோட்டல் வளாகங்களையும் அமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தினார். குறிப்பாக, அமைச்சர் சுனில் வட்டகல ஒரு கடிதத் தலைப்புடன் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், இலங்கையின் காணிகளை இந்தியாவுக்கு வழங்கி அங்கு ஹோட்டல்களை அமைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என்றும் அவர் பகிரங்கப்படுத்தினார்.
இந்தச் சிங்கள பௌத்த நாட்டை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால், அவர் தேசத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எனத் தெரிவித்த தேரர், அரசாங்கத்தின் இத்தகைய நகர்வுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரித்தார். பௌத்த பிக்குகள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.