தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். மாளிகாவத்தை பகுதியில் நேற்று (அக்டோபர் 31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு உரிய வகையில் நிறைவேற்றப்படாமையினால் நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது, பாதாள உலகக் குழுக்கள்: “அரசாங்கம் கூறுவது போல, பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழித்து, போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது, அவர்கள் வீடு திரும்புவார்களா இல்லையா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லா நிலை காணப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா அல்லது கொலை நடக்குமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்நாட்டு மக்கள் இன்று சமூகப் பாதுகாப்பைக் கூட இழந்துவிட்டனர்.
அச்சமின்றி மக்களுக்குச் சேவை செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், “இந்த அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாது போயுள்ளது.”
இந்த அரசாங்கத்தின் திறமையின்மையால் முழு நாட்டிலும் அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

