இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்களால் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் இந்நிறுவனங்களால் நாட்டில் பல பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய கடன் மாபியாவுக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற அமைப்பின் குழுவினரை நேற்று (07.01.2023) சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நிகழ்நிலை கடன் நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் 365 சதவீதத்துக்கும் மேல் வட்டி வசூலிப்பதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அங்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத இந்த நிதி பரிவர்த்தனைகளால் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்களால் இந்த நாட்டில் பல பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு தொலைபேசியில் அழைப்பு மூலம் குறித்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.