இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யாழ் மாநகரசபையினுடைய மேயர், பிரதி மேயர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான மதிவதனி மற்றும் இமானுவேல் தயாளன் ஆகியோர் முறையே மேயர் பிரதி மேயராக பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகின்றோம்.
உள்ளூராட்சி சபைகளில் எந்தத் தரப்பினர் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்களோ அவர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.
சில கட்சிகள் இந்த கோட்பாட்டுக்கு மாறாக செயற்பட்டமை வருத்தத்திற்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.