அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சம்பளமற்ற விடுமுறைகளை (No-Pay Leave) அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்குப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அறிவித்துள்ளார்.
புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களைப் பொறுப்பேற்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுச் செயலாளர்கள், மாகாணப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு சம்பளமற்ற விடுமுறைகளை வழங்குவதற்கான பொது நிர்வாகச் சுற்றறிக்கை 2022ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி முதல் அமுலானது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் கீழ் விடுமுறைகளை அங்கீகரிப்பது நிறுத்தப்படுகிறது.
தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறையில் உள்ள உத்தியோகத்தர்கள், அங்கீகரிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அமைவாக மாத்திரம் அந்த விடுமுறையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அமைய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உண்டு.
அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த புதிய வெளிநாட்டு விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் நீடிப்பு விண்ணப்பங்களுக்குப் புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது. எனினும், தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும்.
உள்நாட்டு விடுமுறைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து விடுமுறை விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனப் புதிய சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.