24 65fdaf1db7482
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலையத்திலேயே வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (22.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும்.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அதன்படி மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஓரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 10 முதல் திறன் மதிப்பீட்டு புள்ளிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் செலுத்தும் தபால் நிலையங்கள், குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப் பத்திர விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தகவல் கட்டமைப்பின் இணைக்கப்படவுள்ளன.

அந்த தரவுகளின்படி, விபத்து குறித்த குறுஞ்செய்தி மற்றும் விபத்து தொடர்பான காணொளிகள் தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபையினால் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்.

வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானித்துள்ளன.

பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதக்கம் வெல்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர்.

கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம்.

அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபை 1998 இல் நிறுவப்பட்டது. தற்போதைய நிலைமைகளுக்கமைய அதற்காக ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால் தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபையை வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவாக மாற்றியமைப்பதற்கான அங்கீகாரத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...