காவல்துறை மா அதிபர் வெட்கப்பட வேண்டும் – அரசாங்கத்தையும் காவல்துறையையும் சாடிய நாமல் ராஜபக்ச!

25 6924072f60eae

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, தற்போதைய காவல்துறை மா அதிபர் (IGP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தெருக்களில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் வெட்கப்பட வேண்டும் என நாமல் தெரிவித்தார். அவர் நாட்டின் காவல்துறையாகச் செயற்படாமல், NPP அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்பவராகவே செயல்படுகிறார் எனச் சாடினார்.

கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியவர்களே தற்போது கஞ்சா செய்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார். NPP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வாகன விபத்து குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதன் மூலம், அந்த விசாரணைகளை அரசாங்கம் முடக்கி வருவதாக நாமல் குற்றம் சாட்டினார்.

அரசியல் பழிவாங்கல் பயம் காரணமாக அதிகாரிகள் கடமைகளைச் செய்யத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், சட்ட அமலாக்கத் துறையில் அரசியல் தலையீடு இருக்கும்போது காவல்துறை மா அதிபர் மௌனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Exit mobile version